ஜனாதிபதியால் ஆலோசனை குழு நியமனம்

ஜனாதிபதியினால் ஆலோசனை குழு நியமனம்

by Staff Writer 07-04-2022 | 9:17 AM
Colombo (News 1st) கடன் நெருக்கடிக்கான தீர்வு தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஸவினால் ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ⭕ இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொதுநலவாய செயலகத்தின் பொருளாதார விவகார பிரிவின் முன்னாள் பணிப்பாளருமான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி ⭕ Georgetown பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி பயிற்சி தொடர்பான பேராசிரியர் மற்றும் உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர் பேராசிரியர் சாந்தா தேவராஜன் ⭕ நிறுவனத்திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆபிரிக்க திணைக்களத்தின் முன்னாள் பிரதி பணிப்பாளர் கலாநிதி ஷர்மினி குரே ஆகியோர் பல தரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைபேற்றுத்தன்மை தொடர்பான ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், ஜனாதிபதியைச் சந்தித்து, சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல் மற்றும் உரிய தேவைகளுக்காக தொடர்பாடல்களை தொடர்ந்தும் பேணுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்புடைய இலங்கையின் நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தல், தற்போதைய கடன் நெருக்கடிக்கு தீர்வு காணுதல் மற்றும் இலங்கையின் நிலையான மீட்சிக்கு அவசியமான வழிகாட்டல்களை வழங்குதல் என்பன ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் பொறுப்புக்களாகும்.