பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்த வேண்டாம்: பாதுகாப்பு செயலாளர் கோரிக்கை 

by Staff Writer 05-04-2022 | 3:23 PM
Colombo (News 1st) அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறும், பொதுச்சொத்துகளுக்கு சேதமேற்படுத்த வேண்டாம் எனவும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில், சில பகுதிகளில் திட்டமிடப்பட்ட வகையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதாக அவர் கூறினார். இரண்டு தரப்புகளால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டார். தங்களின் பிரச்சினைகளை தெரிவித்து அமைதியான முறையில் ஒருசாரர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும், திட்டமிட்டவாறு வன்முறைகளை தூண்டும் வகையில் பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தி மற்றுமொரு சாரார் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார். ஜனநாயக விழுமியங்களைக் கடைப்பிடித்து, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்குமாறு பாதுகாப்பு செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். அமைதியை பாதுகாக்கவும் சட்டவிரோதமாக செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் பாதுகாப்புத் தரப்பினர் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன சுட்டிக்காட்டினார்.