நாமல் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு விசாரணை

நாமல் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு விசாரணை

by Staff Writer 05-04-2022 | 6:29 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ வெளிநாடு செல்லும் தேவை ஏற்பட்டால், அவருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் காலங்களில் விசாரணை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று ஆஜரான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 6 சந்தேகநபர்களுக்கு எதிராக நிதி தூய்தாக்கல் தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த வழக்கை எதிர்வரும் 28 ஆம் திகதி விசாணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று தீர்மானித்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நாமல் ராஜபக்ஸ சார்பில் ஆஜரான சட்டத்தரணி காமினி மாரப்பன, பாராளுமன்ற அமர்வு நடைபெறுவதால் இன்று சந்தேகநபரான நாமல் ராஜபக்ஸ நீதிமன்றில் ஆஜராக மாட்டார் என அறிவித்தார். அமைச்சர் நாமல் ராஜபக்ஸ மற்றும் Gowers Corporate Services உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். நாமல் ராஜபக்ஸ பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் Gowers Corporate Services நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனமொன்றில் இருந்து 30 மில்லியன் ரூபாவை பண மோசடி செய்து, நிதி தூய்தாக்கல் தடுப்புச்சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாக சட்டமா அதிபர் குறித்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.