by Staff Writer 04-04-2022 | 2:58 PM
Colombo (News 1st) யாழ். பல்கலைக்கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர் சி. சிறிசற்குணராசாவின் தலைமையில் இடம்பெற்ற பீடாதிபதிகள் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலையில் மாணவர்களின் நலன்கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர், பேராசிரியர் சி. சிறிசற்குணராசா கூறியுள்ளார்.
அதற்கமைய, விடுதிகளிலிருந்து அனைத்து மாணவர்களும் உடனடியாக வௌியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சாரம் இன்மையால், மின்பிறப்பாக்கிகள் பயன்படுத்தப்படுவதுடன் அவற்றை செயற்படுத்தவும் தற்போது டீசல் இல்லாது போயுள்ள நிலையில் கல்விசார் நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், பரீட்சை மற்றும் அத்தியாவசிய ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடும் மருத்துவ பீட இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மாத்திரம் கற்றல் நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.