நுவரெலியா வசந்த கால கொண்டாட்டங்களுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு 

by Staff Writer 01-04-2022 | 6:10 PM
Colombo (News 1st) பொதுமக்களின் எதிர்ப்பினால் நுவரெலியா வசந்த கால கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், நுவரெலியா - கிரகரி வாவி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வசந்த கால கொண்டாட்டங்களை ஆரம்பிக்கும் நிகழ்விற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நுவரெலியா நகரில் இருந்து பொதுமக்கள் நடைபவனியாக கிரகரி வாவி பகுதிக்கு வந்த சந்தர்ப்பத்தில் கார்ல்டன் பாலர் பாடசாலை அருகில் இந்த எதிர்ப்பு மேற்கொள்ளப்பட்டது. நாட்டில் பொருளாதார நெருக்கடி வலுப்பெற்றுள்ள நிலையில், வசந்தகால நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எதிர்ப்பு வௌியிடப்பட்டது. எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக நுவரெலியா - பதுளை பிரதான வீதியூடான போக்குவரத்து ஒரு மணித்தியாலத்திற்கு தடைப்பட்டிருந்தது. மத்திய மாகாண ஆளுநர் லலித் U.கமகே மற்றும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவிருந்த போதிலும், அவர்கள் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. பொதுமக்களின் எதிர்ப்பினால் நிகழ்வினை நிறுத்தும் நிலை அதிகாரிகளுக்கு ஏற்பட்டது.