12 குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் உண்ணாவிரதம்

குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் 12 பேர் இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் 

by Staff Writer 01-04-2022 | 4:19 PM
Colombo (News 1st) குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் 12 பேரால் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் இன்று (01) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. சுகாதார அமைச்சுக்கு முன்பாக இந்த சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. குடும்ப நல சுகாதார சேவைக்கான விசேட தரத்தை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவி தேவிகா கொடித்துவக்கு குறிப்பிட்டார். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தங்களின் ஊழியர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், சுகாதார அமைச்சின் செயலாளரும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவி தேவிகா கொடித்துவக்கு சுட்டிக்காட்டினார். பதவி உயர்வை பெற்றுக்கொள்ள உண்ணாவிரதத்தில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.