எரிபொருள் நெருக்கடி: பொது போக்குவரத்து சேவை ஸ்தம்பிதமடையும் நிலை 

by Bella Dalima 30-03-2022 | 8:49 PM
Colombo (News 1st) மின் துண்டிப்பு நாளை (31) முதல் 13 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ​இதனால் நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இதனிடையே, டீசல் இன்மையால், இன்றும் நாட்டின் பல பகுதிகளில் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் வாகனங்களைக் காண முடிந்தது. டீசலுக்கான வரிசையில் காத்திருந்த மக்கள் இன்று முற்பகல் பதுளை- பண்டாரவளை பிரதான வீதியில் பண்டாரவளை CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகே வீதியை மறித்து எதிர்ப்பில் ஈடுபட்டனர். மக்கள் டீசலுக்கான வரிசையில் நின்று அசௌகரியத்தை அனுபவித்த நிலையிலும் இன்று பிற்பகல் பண்டாரவளை மாநகர சபை மேயர் விளையாட்டு மைதானம் ஒன்றை திறந்து வைத்தார். எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் தமது எதிர்ப்பை வௌிப்படுத்தினர். இதனிடையே, ஜனாதிபதி செயலகத்தில் ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி சுமித் விஜேசிங்க தற்போதைய நெருக்கடி தொடர்பில் கருத்து தெரிவித்தார். கடந்த வருடங்களை விட எரிபொருள் பயன்பாடு 30 முதல் 35% அதிகரித்துள்ளதாகவும் ஏப்ரல் மாதத்திற்காக விசேட அனுசரணை இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஏப்ரல் மாதத்திற்கு தேவையான பெட்ரோல் டீசல் மற்றும் விமானங்களுக்கான எரிபொருள் என்பன உரிய திட்டமிடலுக்கு அமைய கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். நெருக்கடிக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்பது தொடர்பில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கருத்துகளை வௌியிட்ட நிலையில், இந்த நெருக்கடிக்கான காரணத்தை தொழிற்சங்கங்கள் தௌிவுபடுத்தின. 500 மில்லியன் டொலரை பயன்படுத்தி மே மாத ஆரம்பம் வரை தொடர்ச்சியாக எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான இயலுமை இருந்தும், இறக்குமதி செய்யப்படுகின்ற எரிபொருளை பயன்படுத்தி மின்வெட்டை தவிர்ப்பதற்காக எரிபொருளை மின்சார சபைக்கு வழங்குவதற்கான இயலுமை இருந்தும் அதனை கவனத்திற்கொள்ளாமல், கப்பல் 6 நாட்களாக 37,000 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் காத்திருப்பதாக ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்க சக்தி ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித்த குறிப்பிட்டார். எரிபொருள் நெருக்கடியை அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களே உருவாக்கியுள்ளதாகவும் அவசர கொள்வனவு மற்றும் தாமதக் கட்டணங்களை டொலர்களைக் கொண்டு செலுத்தி தரகர் கூலி பெறுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்நிலையில், தொடர்ந்து டீசல் கிடைக்காவிட்டால் பொதுப் போக்குவரத்து சேவை ஸ்தம்பிதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், எதிர்காலத்தில் அத்தியாவசிய சேவைகளை கருத்திற்கொண்டு நேர சூசியை தயாரிக்க உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் A.H.பண்டுக சுவர்ணவங்ச தெரிவித்தார். இந்த வாரத்தில் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிடின் அடுத்த வாரத்தில் நாடு பூராகவும் பஸ்களின் போக்குவரத்தை நிறுத்துவோம் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.