பாராளுமன்றத்தை கலைக்கும் திட்டம் தொடர்பில் கம்மன்பில  

by Bella Dalima 29-03-2022 | 8:58 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துவதற்கு நாட்டின் அரசியலமைப்பில் காணப்படும் சந்தர்ப்பங்களை செயற்படுத்துவது தொடர்பில் பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில இன்று கருத்து வௌியிட்டார். பாராளுமன்றத்தை கலைத்து தம்மை ஆளக்கூடிய ஆட்சியாளர்களை மீண்டும் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பத்தை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு தமது கட்சி தயாராகி வருவதாக உதய கம்மன்பில குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தை கலைப்பதற்கு இரண்டு அல்லது இரண்டரை வருடங்கள் அவசியம் என சபாநாயகருக்கு கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் விருப்பத்திற்கு அமைய பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமானால் மாத்திரமே இரண்டரை வருடங்கள் தேவைப்படும். எனினும், பாராளுமன்றத்தின் தேவைக்கு அமைய, பாராளுமன்றத்தை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கலைக்க முடியும். அதற்கு அரசியலமைப்பின் 71 ஆவது சரத்தின் அ பிரிவு வழி சமைத்துள்ளது. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதியால் முடியும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஒருவரிடம் காணப்படும் பட்சத்தில், ஜனாதிபதி அல்ல பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை வைத்திருக்கும் நபரே பலம் மிக்கவராகக் கருதப்படுவார்
என அவர் மேலும் குறிப்பிட்டார். அரசாங்கத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டு வந்து அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும். இது மிகவும் கடினமான விடயம் . அதனை மேற்கொள்ள மக்களின் பேராதரவு கட்டாயம் தேவை என உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார். இந்தியாவிடமிருந்து கடன் கிடைப்பதால், ஏப்ரல் மாதமளவில் தற்போதுள்ள நெருக்கடிகளுக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், கடன் வசதிகளுடாக கிடைக்கும் சலுகைகள் முடிவடைந்த பின்னர் மக்கள் வீதிக்கு இறங்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக தம்மால் நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். அவ்வாறு 113 பேர் ஒன்றிணைந்த பின்னரே நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர முடியும் எனவும் அவர் கூறினார்.