பாட்டலியின் மீளாய்வு மனு விசாரணையின்றி தள்ளுபடி  

பாட்டலி தாக்கல் செய்த மீளாய்வு மனு விசாரணையின்றி தள்ளுபடி  

by Staff Writer 29-03-2022 | 4:02 PM
Colombo (News 1st) இராஜகிரியவில் இடம்பெற்ற விபத்தில் சாட்சியத்தை மறைத்த குற்றச்சாட்டில், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், சாட்சி விசாரணையை கைவிடுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தாக்கல் செய்த மீளாய்வு மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணையின்றி தள்ளுபடி செய்துள்ளது. அதற்கமைய, பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்புமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், நீதிபதிகளான மேனகா விஜயசுந்தர மற்றும் எஸ்.குமாரரத்ன ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே தள்ளுபடி செய்யப்பட்டது. இராஜகிரிய விபத்தில் சாட்சியங்களை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், சாட்சி விசாரணைகளை கைவிடுமாறு கோரி குறித்த மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை முன்னகர்த்தி கொண்டு செல்ல முடியாது என்பதால், சாட்சி விசாரணைகளை கைவிடுமாறு பாட்டலி சம்பிக்க ரணவக்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.