மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் மீளாய்வு

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் மீளாய்வு

by Staff Writer 26-03-2022 | 3:36 PM
Colombo (News 1st) மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் தற்போது மீளாய்வு செய்து வருவதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்தது. மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார். இதற்கு ஒரு மாத காலம் தேவைப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், மின்சாரம் துண்டிக்கப்படும் இவ்வாறான சூழ்நிலையில், மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது நியாயமற்றது என்பதே, தமது ஆணைக்குழுவின் நிலைபாடாக உள்ளதெனவும் அவர் கூறினார். இதேவேளை, தற்போதைய மற்றும் முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலுவையிலுள்ள நீர் கட்டணங்கள், 16 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நீர் கட்டணத்தை செலுத்தத் தவறிய சுமார் 20 அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தற்போது உயிருடன் இல்லை எனவும் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், அமைச்சர்களின் நீர் கட்டணங்களை செலுத்தும் பொறுப்பு அந்தந்த அமைச்சுகளுக்கு உள்ளதால், நீர் கட்டண நிலுவைகளை சம்பந்தப்பட்ட அமைச்சுகளிடம் இருந்து மீள பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டது.