பசிலுக்கு எதிரான மல்வானை காணி வழக்கு: இனி சாட்சி விசாரணை இல்லை

by Bella Dalima 25-03-2022 | 3:15 PM
Colombo (News 1st) நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோருக்கு எதிராக மல்வானை காணி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், இதன் பின்னர் சாட்சி விசாரணை முன்னெடுக்கப்பட மாட்டாது என சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளது. கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஷனில் குணரத்ன இதனை மன்றுக்கு தெரிவித்துள்ளார். கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி அறிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணி திஸ்ஸ குணவர்தன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாமினர், அமைச்சர் பசில் ராஜபக்ஸ சார்பில் மன்றில் இன்று ஆஜராகினர்.