by Bella Dalima 25-03-2022 | 3:29 PM
Colombo (News 1st) கடவத்தை , 09 ஆம் மைல்கல் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
பேலியகொடையை சேர்ந்த 30 மற்றும் 31 வயதான இரண்டு பேரே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் 09 ஆம் மைல்கல் பகுதியில் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் கிரிபத்கொடை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் இரு குழுக்களை சேர்ந்தவர்களிடையே துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடவத்தை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.