by Staff Writer 23-03-2022 | 12:54 PM
Colombo (News 1st) யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 22 இந்திய மீனவர்கள் இன்று(23) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் இன்று(23) மீனவர்கள் 22 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒன்றரை வருட சிறைத்தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில் இந்திய மீனவர்கள் 22 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்படட 02 படகுகளில் ஒன்றை அரசுடமையாக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மற்றைய படகுக்கான உரிமையாளர் இன்மையால், படகு உரிமை கோரிக்கை வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட தனிப்பட்ட உடைகளை அவர்களிடமே வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை மிரிஹான இடைத்தங்கள் முகாமிற்கு அனுப்பி, இந்தியாவிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Sea Of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட போது, கடந்த பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி இந்திய மீனவர்கள் 22 பேரும் கைது செய்யப்பட்டனர்.
ஒரு படகில் 13 பேரும் மற்றுமொரு படகில் 09 பேருமாக கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.