கடலையும் வான் பரப்பையும் கண்காணிக்க 6 மில்லியன் டொலர்களை வழங்கும் இந்தியா

by Bella Dalima 22-03-2022 | 8:46 PM
Colombo (News 1st) இலங்கை கடற்படைத் தலைமையகத்தில், 6 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில், சமுத்திர மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தை ஆரம்பிப்பதற்கு இந்தியா தயாராகி வருகின்றது. ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட ஏனைய ஏழு பகுதிகளில் ஸ்தாபிக்கப்படவுள்ள ஒருங்கிணைப்பு நிலைய கட்டமைப்பிற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை நேற்று (21) அனுமதி வழங்கியது. சர்வதேச உடன்படிக்கைகளுக்கு அமைய, இலங்கையின் கடற்பிராந்தியம், விசேட பொருளாதார கேந்திர மையத்திற்கு அப்பால் சென்ற கடற்பிராந்தியமாக காணப்படுகிறது. இதனால், குறித்த வலயத்தில் பயணிக்கும் அனைத்து கப்பல்கள் தொடர்பிலும் கண்காணிப்பது, அவசர நிலையின் போதான பொறுப்புக்கூறல் இலங்கை கடற்படையைச் சார்ந்தது. இந்தியா வழங்குகின்ற 6 மில்லியன் அமெரிக்க டொலரில் குறித்த சமுத்திர மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தை ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சிற்கு சொந்தமான Bharat Electronics Limited-ஆல் சமுத்திர மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு மத்திய நிலையம் செயற்படுத்தப்படுகின்றது. குறித்த சமுத்திர மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு மத்திய நிலையம் இலங்கை கடற்படையின் தலைமையகத்தில் அமைக்கப்படவுள்ளது. ஹம்பாந்தோட்டையில் உப மத்திய நிலையம் செயற்படுத்தப்படுவதுடன் காலி, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, அறுகம்பை, மன்னார் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் ஏனைய செயற்பாட்டு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன. இது தொடர்பிலான இந்திய-இலங்கை அரசாங்கங்களுக்கிடையிலான ஒப்பந்தத்திற்கும், Bharat Electronics Limited, இந்தியா, இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான மற்றுமொரு ஒப்பந்தத்திற்கும் அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தியாவால் உற்பத்தி செய்யப்படும் 3 நவீன Dornier ஆளில்லா சமுத்திர கண்காணிப்பு படகுகளையும் 4000 மிதக்கும் Drone-களையும் இலங்கை கடற்படையின் பயன்பாட்டிற்காக வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது. இதனைத் தவிர டிஜிட்டல் அடையாள வரைபை தயாரிப்பதற்கு 300 மில்லியன் இந்திய ரூபாவை வழங்கவும் இந்திய அரசாங்கம் தயாராகியுள்ளது. இதற்காக இந்திய நிறுவனத்தால் இலங்கை குடிமக்களின் தரவுகள் சேகரிக்கப்படும் பட்சத்தில், நாட்டின் தேசிய பாதுகாப்பில் தாக்கம் ஏற்படுமா என இணை அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரனவிடம் வினவியபோது, 'அவ்வாறான தரவுகள் இந்திய அரசாங்கத்தால் சேகரிக்கப்படுவதில்லை. நிதி பங்களிப்பு வழங்குவதாகத் தெரிவித்தே இந்த இருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகின்றது. அதனால் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் தரவுகள் ஏதும் சேகரிக்கப்பட மாட்டாது,'' என அவர் பதிலளித்தார். இலங்கைக்கு தேவையான உணவு, ஒளடதங்களை கொள்வனவு செய்வதற்காக ஒரு மில்லியன் டொலர் கடன் வழங்கப்பட்டுள்ளதுடன், நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிக்காக 2.4 மில்லியன் கடந்த மாதங்களில் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையின் பாதுகாப்பை இந்தியாவிற்கு விற்பது ஆபத்தானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
சமுத்திர மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு மத்திய நிலையம் என்பது கடற்படையினரின் தலைமையகமாகவுள்ளது. இங்கு பணியாற்றும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கடற்படை வீரர்கள் இந்தியாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளார்களா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இதன் உப நிலையம் ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ளது. பாரிய புதினமாக இது உள்ளது. கடல் பாதுகாப்பை இந்தியாவிற்கு வழங்கி, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்குகின்றனர். பாரிய யுத்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்வதற்கான முட்டாள்தனமான உடன்படிக்கையே இது என்பதை கூற விரும்புகின்றேன்
என ஹரின் பெர்னாண்டோ கூறினார். இந்தியாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள மூன்று உடன்படிக்கைகள் தொடர்பில் உடனடியாக மக்களுக்கும், பாராளுமன்றத்திற்கும் அம்பலப்படுத்துமாறு எல்லே குணவங்ச தேரர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவிடம் ஒரு பில்லியன் டொலர் கடன் பெறப்பட்ட போது கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை தொடர்பாகவும் இதுவரை நாட்டிற்கு வௌிக்கொணரப்படவில்லை எனவும் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். சொற்ப தொகை பணத்திற்காக வடக்கு, கிழக்கு அல்லது நாட்டின் வேறு மாகாணங்களிலுள்ள தேசிய வளங்களை கொள்ளையிடுவதற்கு அல்லது தாரைவார்ப்பதற்கான சதிகள், திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு தாம் தயார் எனவும் எல்லே குணவங்ச தேரர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.