தவணைப் பரீட்சைகளை பிற்போட வேண்டிய அவசியமில்லை

தவணைப் பரீட்சைகளை பிற்போட வேண்டிய அவசியமில்லை: கல்வி அமைச்சு அறிவிப்பு

by Staff Writer 19-03-2022 | 4:06 PM
Colombo (News 1st) வினாத்தாள்களை அச்சிடுவதற்கான காகிதம் மற்றும் மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் மாகாண மட்டத்தில் தவணை பரீட்சைகளை நடத்துவதில் எவ்வித தடையும் இல்லை எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. காகிதம் மற்றும் மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக வினாத்தாள் அச்சிடுவதில் தடை ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில், மாகாண மட்டத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கூறினார். இதனடிப்படையில் வடமேல், சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களில் அவ்வாறான நிலைமை ஏதும் இல்லை என மாகாண கல்வி பணிப்பாளர்கள் தமக்கு அறிவித்ததாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். கல்வி நடவடிக்கைகளுக்கான காகிதத்தை கொள்வனவு செய்வதில் ஏதேனும் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில், இந்திய கடன் வசதியின் கீழ் குறித்த பிரச்சினையை நிவர்த்திப்பதற்கு ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் இணங்கியுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் கூறினார். இதன் பிரகாரம், இம்முறை நடத்த திட்டமிடப்பட்டுள்ள தவணைப் பரீட்சைகளை பிற்போட வேண்டிய அவசியமில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா சுட்டிக்காட்டினார்.