6 இந்திய மீனவர்கள் விடுதலை

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தால் 6 இந்திய மீனவர்கள் விடுதலை

by Staff Writer 18-03-2022 | 4:18 PM
Colombo (News 1st) எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 06 இந்திய மீனவர்கள் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீனவர்கள் தொடர்பான வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் J.கஜநிதிபாலன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டமை மற்றும் கைது செய்யப்படும் வேளையில் மீனவர்கள் தமது வலைகளை தொடக்கறுத்து வைத்திருக்காமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் இந்திய மீனவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட, ஒரு வருட சிறைத்தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார். படகுகளுக்கான விசாரணை தொடர்பில் எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதி, படகு உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டார். இராமநாதபுரத்தை சேர்ந்த குறித்த 06 இந்திய மீனவர்களும் கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.