அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு ஒத்துழைப்பதாக மோடி தெரிவிப்பு

by Staff Writer 16-03-2022 | 8:15 PM
 Colombo (News 1st) அயல்நாட்டு நெருங்கிய நண்பராக, அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்காக முன் நிற்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவை இன்று சந்தித்த போதே பாரத பிரதமர் இதனை கூறியுள்ளார். இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் இன்று புது டெல்லியில் பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இரு தரப்பு நெருக்கடிகள் தொடர்பிலும் உதவிகளை வழங்குவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விவசாயம், மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி, சுற்றுலா மற்றும் மீன்பிடித்துறை தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில், இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட உள்ளிட்ட சிலரும் கலந்துகொண்டிருந்தனர். நெருக்கடியான நேரத்தில் இந்தியா வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு இதன்போது நிதியமைச்சர் இந்திய பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதேவேளை, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ் ஜெய்சங்கர், இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நாட்டில் காணப்படும் நெருக்கடிகளுக்கு நான்கு முறைகள் ஊடாக தீர்வை வழங்க அவர்கள் இணக்கம் தெரிவித்ததாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது. அத்தியாவசிய உணவுப்பொருள், மருந்து மற்றும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு இந்தியா கடனுதவியை வழங்கல், அந்நிய செலாவணியை அதிகரிக்க Swap ஒத்துழைப்பு வழங்கல், திருகோணமலை எண்ணெய்க் குத கட்டமைப்பை நவீனமயப்படுத்தல் மற்றும் இலங்கையில் இந்திய முதலீட்டு வசதிகளை ஏற்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் அவற்றில் உள்ளடங்குகின்றன.