அம்பாறையில் 11 வயது சிறுமி மீது தாக்குதல்; தந்தை கைது

by Staff Writer 15-03-2022 | 3:24 PM
Colombo (News 1st) அம்பாறை - பள்ளிக்குடியிருப்பு பகுதியில் 11 வயது சிறுமி தாக்கப்பட்டமை தொடர்பில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 31 வயதான அந்நபரை அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான சிறுமியின் தாயிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைகளின் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். பள்ளிக்குடியிருப்பு பகுதியில் கடந்த வியாழக்கிழமை (10) சிறுமியொருவர் தாக்கப்படும் காட்சி கையடக்க தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டன. பிஸ்கட் பெற்றுத்தருவதாக சிறுமியின் தந்தை கடைக்கு அழைத்துச் சென்று, பிஸ்கட் பக்கெட் ஒன்றை திருடிக் கொடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன்போது, சிலர் சுற்றிவளைத்த நிலையில், சிறுமியை தள்ளிவிட்டு, தந்தை தப்பிச் சென்றுள்ளார். இதன்போது காயமடைந்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளார். சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.