Facebook ஊடான விருந்துபசாரம் சுற்றிவளைப்பு

Facebook ஊடான விருந்துபசாரம் சுற்றிவளைப்பு; 39 பேர் கைது

by Staff Writer 14-03-2022 | 2:59 PM
Colombo (News 1st) வென்னப்புவ - வயிக்கால பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் சமூக வலைத்தளத்தினூடாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகப்புத்தகத்தின் (Facebook) ஊடாக தெரிந்துகொண்ட குழுவினர் போதைப்பொருட்களுடன் விருந்துபசாரமொன்றை முன்னெடுப்பதாக வென்னப்புவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்குளி, கனேமுல்ல, நீர்கொழும்பு, அனுராதபுரம், வத்தளை மற்றும் மீரிகம உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 20 முதல் 30 வயதுக்கிடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வசமிருந்த 2 கிராம் 110 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள், 5 கிராம் ஹஷீஸ் போதைப்பொருள், 27 கிராம் கஞ்சா மற்றும் 15 போதைவில்லைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து, நாளை மறுதினம்(16) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.