ஈஸ்டர் தாக்குதல்: 12மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

by Staff Writer 14-03-2022 | 4:01 PM
Colombo (News 1st) புலனாய்வு தகவல்கள் கிடைத்தும் ஏப்ரல் 21 தாக்குதலை தடுக்காமையினால் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட 12 மனுக்கள், 07 பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அளுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, முர்து பெர்னாண்டோ, L.T.B. தெஹிதெனிய, எஸ். துரைராஜா, காமினி அமரசேகர உள்ளிட்ட குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பிரதிவாதிகளாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அப்போதைய அமைச்சரவை மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். குண்டுத் தாக்குதலில் தமது இரு பிள்ளைகளை இழந்த நந்தன சிரிமான்ன, சுற்றுலாத்துறையைச் சேர்ந்த ஜனத் விதானகே, சரத் இந்தமல்கொட, குண்டுத் தாக்குதலில் சிக்கிய சட்டத்தரணி மோதித்த ஏக்கநாயக்க உள்ளிட்டோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். கடமைகளை துறந்தமை தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடுமாறு மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.