by Staff Writer 11-03-2022 | 6:07 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - இரணைத்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 08 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் திங்கட்கிழமை (14) நீதிமன்றத்தில் முன்னிலையாக்குமாறு இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்திய மீனவர்கள் 8 பேரும் இன்று ஆஜர்படுத்தப்படாத நிலையில், மீனவர்கள் சார்பில் யாழ். இந்திய துணைத்தூதரக அதிகாரி ஒருவர் மன்றில் முன்னிலையானதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், மீனவர்களை எதிர்வரும் திங்கட்கிழமை மன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் எஸ்.லெனின் குமாரினால் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மீனவர்கள் தொடர்பிலான குற்றப்பத்திரம் பகிரங்க நீதிமன்றத்தில் அன்றைய தினம் வாசிக்கப்படுமென கடற்றொழில் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட உதவி பணிப்பாளர் கா.மோகனகுமார் தெரிவித்தார்.
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில், இரணைத்தீவு கடற்பரப்பில் இராமேஸ்வரம் - தங்கச்சிமடத்தை சேர்ந்த 08 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் பயணித்த படகுகள் கடந்த மாதம் 26 ஆம் திகதி இரவு கைப்பற்றப்பட்டன.
இதனிடையே, இலங்கையிலிருந்து நாடு திரும்பிய தமிழக மீனவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றுள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில், 21 தமிழக மீனவர்கள் கடந்த ஜனவரி 31 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டனர்.
குறித்த மீனவர்கள் மார்ச் 21 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டு, விமானம் மூலம் சென்னைக்கு திரும்பினர்.
அதனையடுத்து, நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்திற்கு திரும்பிய மீனவர்களை உறவினர்களும் , கிராம மக்களும் கண்ணீர் மல்க வரவேற்றுள்ளனர்.