கிண்ணியாவில் துப்பாக்கிச்சூடு; மூவர் கைது

கிண்ணியா துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மூவர் கைது

by Staff Writer 08-03-2022 | 11:17 AM
Colombo (News 1st) திருகோணமலை, கிண்ணியா - நடுஊற்று பகுதியில் நேற்று(07) நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் 03 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிண்ணியா பகுதியை சேர்ந்த 30, 43 மற்றும் 54 வயதான 03 சந்தேகநபர்களே இன்று(08) காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட T56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தக்கூடிய 09 ரவைகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. நடுஊற்று பகுதியிலுள்ள களப்புக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா - நடுஊற்று பகுதியில் நேற்று(07) நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த இருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குட்டிகராச்சி பகுதியை சேர்ந்த 30 மற்றும் 33 வயதான இருவரே துப்பாக்கி சூட்டில் காயமடைந்துள்ளனர். இரு தரப்பினருக்கிடையிலான தகராறே துப்பாக்கி பிரயோகத்திற்கு காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.