கிண்ணியா துப்பாக்கிச்சூடு:மூவருக்கு தடுப்புக்காவல்

கிண்ணியாவில் துப்பாக்கிச்சூடு: 3 சந்தேகநபர்களை தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி 

by Staff Writer 08-03-2022 | 7:18 PM
Colombo (News 1st) திருகோணமலை - கிண்ணியா, நடு ஊற்று பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 03 சந்தேகநபர்களையும் 48 மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. திருகோணமலை நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்களை இன்று மாலை ஆஜர்படுத்திய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது. அதற்கமைய, சந்தேகநபர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி மன்றில் ஆஜர்படுத்துமாறு திருகோணமலை நீதவான் உத்தரவிட்டுள்ளார். நடு ஊற்று பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில், கிண்ணியாவை சேர்ந்த 30, 43, 54 வயதான மூன்று சந்தேகநபர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட T-56 ரக துப்பாக்கியும், அதற்கு பயன்படுத்தக்கூடிய 09 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. நடு ஊற்று பகுதியிலுள்ள களப்பு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், குட்டிகராச்சி பகுதியை சேர்ந்த 30 மற்றும் 33 வயதான இருவரே துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளனர். மணல் அகழ்வு தொடர்பில் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட தகராறே துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.