COVID காரணமாக மரணிப்பவர்களை அனைத்து மயானங்களிலும் அடக்கம் செய்ய அனுமதி

by Staff Writer 04-03-2022 | 3:49 PM
Colombo (News 1st) COVID காரணமாக மரணிப்பவர்களின் உடல்களை நாளை (05) முதல் அனைத்து மயானங்களிலும் அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் COVID காரணமாக உயிரிழப்போரின் உடல்களை மட்டக்களப்பு - ஓட்டமாவடியில் மாத்திரமே அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனிடையே, COVID தொற்றுக்குள்ளானவர்களில் 72 பேர் தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதிதீவிர சிகிச்சை பிரிவில் மேலும் 81 COVID நோயாளிகளுக்கான கட்டில்கள் மாத்திரமே காணப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். COVID நோயாளிகளுக்காக வைத்தியசாலைகளில் 13,599 கட்டில்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அவற்றில் இதுவரை 4,299 கட்டில்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதனிடையே, நாட்டில் சுமார் 07 இலட்சம் பேர் இதுவரை எந்தவொரு COVID தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளவில்லையென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இதுவரை 169 இலட்சம் பேர் முதலாவது COVID தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதுடன், மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 72 இலட்சத்தை தாண்டியுள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை, இலங்கையில் COVID தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 06, 48, 410 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை 16, 287 பேர் COVID-இனால் உயிரிழந்துள்ளனர். 06,09,485 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர். இதற்கமைய, 22,638 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.