நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கடன் வசதி வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

by Staff Writer 04-03-2022 | 7:56 PM
Colombo (News 1st) நெல் கொள்வனவிற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கடன் வசதியை ஏற்படுத்திக்கொடுக்குமாறு, இலங்கை மத்திய வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார். போட்டித்தன்மையுடன் நெல் கொள்வனவு செய்து, போதுமானளவு நெல் கொள்ளளவை பேணுவதை இலக்காகக் கொண்டு வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொழும்பு-02 இல் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைமை காரியாலயத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். பெரும்போகத்தில் நெல் கொள்வனவு செய்தல், சேகரித்தல், விநியோகம் மற்றும் தட்டுப்பாடின்றி சந்தையில் நெல் தேவையை பூர்த்தி செய்வதற்கு எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மதிப்பீடு செய்வதே ஜனாதிபதியின் அவசர கண்காணிப்பு விஜயத்தின் நோக்கமாகும். நெல் கொள்வனவை துரிதப்படுத்துவதற்காக உதவி பிராந்திய முகாமையாளர்களாக பட்டதாரிகள் 40 பேரும் களஞ்சிய நடவடிக்கைகளுக்காக 200 அதிகாரிகளும் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.