கொள்கை வட்டி வீதங்களை அதிகரிக்க CBSL தீர்மானம்

கொள்கை வட்டி வீதங்களை அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானம் 

by Staff Writer 04-03-2022 | 4:19 PM
Colombo (News 1st) வட்டி வீதத்தில் தாக்கம் செலுத்தும் கொள்கை வட்டி வீதங்களை அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில், நிலையான வைப்புத்தொகை வசதிக்கான வட்டியை 6.5 வீதமாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடன் வசதிக்கான வட்டியை 7.5 வீதமாக அதிகரிப்பதற்கும் மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. குறித்த நடவடிக்கைகளின் மூலம் கொள்கை வீதம் 10.5 வீதமாக தானாகவே அதிகரிக்கும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதனிடையே, சட்டப்பூர்வ இருப்பு வீதம் 4 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளது. இதனைத் தவிர ஒழுங்குபடுத்தப்பட்ட வட்டி வீதங்களை அதிகரிப்பதற்கும் மத்திய வங்கியின் நிதிச்சபை தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், கடனட்டைக்கான உச்சபட்ச வட்டி  20 வீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வங்கி மிகை எடுப்புக்கான அதிகபட்ச வட்டி 18 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடகு வசதிகளுக்கான உச்சபட்ச வட்டி 12 சதவீதமாகுமென மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனூடாக பொருளாதார ஸ்திரத்தன்மையை ஊக்குவிப்பதற்கான சந்தர்ப்பம் கிட்டுமெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, தற்போதைய பொருளாதார சவாலை வெற்றிகொள்வதற்கு மத்திய வங்கியினால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை பூர்த்தி செய்வதற்கான மூலோபாய முயற்சிகளை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டுமெனவும் நிதிச்சபை வலியுறுத்தியுள்ளது. அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் நிதி ஆலோசகர் என்ற வகையில், அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய 08 விடயங்களை மத்திய வங்கியின் நிதிச்சபை வௌியிட்டுள்ளது. இவற்றில் மத்திய வங்கியினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அத்தியாவசியமற்ற மற்றும் உடன் அவசியமில்லாத பொருட்களின் இறக்குமதிகளை நிறுத்துதலும் உள்ளடங்கியுள்ளது. அத்துடன், உடன் அமுலாகும் வகையில் மின் மற்றும் எரிபொருட்களின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமென மத்திய வங்கியின் நிதிச்சபை தெரிவித்துள்ளது. வௌிநாட்டு பணப்பரிமாற்றம் மற்றும் முதலீட்டை மேலும் ஊக்குவித்தல், தமது மற்றுமொரு முன்மொழிவென நிதிச்சபை கூறியுள்ளது. எரிசக்தி பாதுகாப்பை நடைமுறைப்படுத்தல், மீள்புதுப்பிக்கத்தக்க சக்தியை நோக்கிய விரைவான நகர்வு மற்றும் நிலையான அடிப்படையில் வரி விதிப்பை அதிகரிப்பதன் மூலம் அரசாங்க வருமானத்தை அதிகரிப்பது மத்திய வங்கியின் நிதிச்சபையினால் வழங்கப்பட்டுள்ள மற்றைய ஆலோசனையாகும். மூலோபாயமற்ற மற்றும் பயன்படுத்தப்படாத சொத்துகளிலிருந்து வருமானம் ஈட்டல் மற்றொரு ஆலோசனையென நிதிச்சபை தெரிவித்துள்ளது.