கிறிஸ்தவக்குளம் கிராம மக்களின் கனவு நனவானது

by Staff Writer 04-03-2022 | 7:46 PM
Colombo (News 1st) மக்கள் சக்தியின் மற்றுமொரு மனிதநேய பணி இன்று நிறைவு செய்யப்பட்டது. வவுனியா - செட்டிக்குளம், கிறிஸ்தவக்குளம் கிராம மக்களின் குடிநீர் கனவு மக்கள் சக்தியூடாக இன்று நனவாகியது. நீண்ட காலமாக சுத்திகரிக்கப்படாத நீரை பருகிய கிறிஸ்தவக்குளம் மக்கள், பல்வேறு சுகாதார பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தனர். இதனால் கிராம மக்கள் பலரும் சிறுநீரக நோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 2020 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட 'மக்கள் சக்தி இல்லங்கள் தோறும்' செயற்றிட்டத்தின் மூலம் இவர்களது பிரச்சினை தொடர்பில் அறியக் கிடைத்தது. நியூஸ்ஃபெஸ்ட் அதனை செய்திகள் வாயிலாக நாட்டு மக்களுக்கு அறியப்படுத்தியது. அதன் பிரதிபலனாக இந்த மக்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பை வழங்க வௌ்ளவத்தையை சேர்ந்த வி. நடேசன் முன்வந்தார். இலங்கை கடற்படையினரின் ஒத்துழைப்புடன் இவர்களுக்கான குடிநீர் திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிரதான வீதியிலிருந்து கிராமத்திற்கு செல்வதற்கான வீதிகளுக்கான மின் விளக்குகளும் பொருத்தப்பட்டன. இன்றைய அங்குரார்ப்பண நிகழ்வில் நியூஸ்ஃபெஸ்ட் முகாமையாளர் ஜெஃப்ரி ஜெபதர்ஷன், கடற்படையின் லெப்டினன்ட் கமாண்டர் M.D.N.குணத்திலக்க, பிரதேச செயலாளர் நிர்மலன் ஞானசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.