கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தல்

கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை 

by Staff Writer 03-03-2022 | 7:08 PM
Colombo (News 1st) மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கும் கடல்சார் தொழிலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவோர் உடனடியாக கரைக்கு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தால் நாட்டின் வடக்கு, வடகிழக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு கடற்பிராந்தியங்களில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. குறித்த கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. வடமத்திய, மத்திய, ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் 50 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.