600 பொருட்களுக்கு இறக்குமதி தடை: இன்று இரவு வர்த்தமானி வௌியீடு

by Bella Dalima 02-03-2022 | 7:23 PM
Colombo (News 1st) அத்தியாவசியமற்ற 600 பொருட்களுக்கான இறக்குமதியை தடை செய்வதற்கான வர்த்தமானி இன்றிரவு வௌியிடப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். இந்த விடயத்தை திறைசேரியின் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார். நாட்டிற்கு அவசியமான விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கி செயற்பட வேண்டும் எனவும், அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியால் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அந்நியச்செலாவணி குறைவடையுமாயின், தற்போது கையிருப்பிலுள்ளதை ஔடத இறக்குமதிக்கு ஒதுக்கிட முன்னுரிமை வழங்க வேண்டும் என எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார். எரிபொருள் மற்றும் கைதொழிலுக்கான மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதற்கும் ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். இவற்றை தவிர்த்து, அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதால் தற்போதைய நெருக்கடி நிலை மேலும் தொடரும் எனவும், கால தாமதமாகியேனும், அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதியை தடை செய்ய எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கது எனவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.