கிளிநொச்சியில் கைதான 12 மீனவர்களும் விடுதலை

கிளிநொச்சியில் கைதான 12 மீனவர்களும் விடுதலை

by Staff Writer 28-02-2022 | 3:13 PM
Colombo (News 1st) கிளிநொச்சியில் கடந்த 12 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் மீனவர்கள் இன்று(28) ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். 07 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 06 மாத சிறைத்தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில் 12 மீனவர்களும் இன்று(28) விடுதலை செய்யப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட உதவிப் பணிப்பாளர் கா. மோகனகுமார் தெரிவித்தார். விடுதலை செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை சிறைச்சாலைகள் அத்தியட்சகரூடாக மிரிஹான இடைத்தங்கல் முகாமிற்கு அனுப்பிவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அங்கிருந்து மீனவர்களை தமிழகத்திற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட 02 படகுகளையும் அரசுடமைக்கி, நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடற்றொழில் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின்றி, இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் இழுவைமடி தொழிலில் ஈடுபட்டமை ஆகிய 02 குற்றச்சாட்டுக்களும் மீனவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டன. கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கை கடற்பரப்பிற்குள் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 59 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அவர்களில் 12 பேர் இன்று(28) விடுதலை செய்யப்பட்டதையடுத்து, மேலும் 47 இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்களின் 11 படகுகளும் இம்மாதத்திற்குள் மாத்திரம் கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளன.