யாழ். சிறையில் தமிழ் கைதிகள் இருவர் இரண்டாவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டம்

by Staff Writer 24-02-2022 | 4:25 PM
Colombo (News 1st) யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் இருவர் இரண்டாவது நாளாகவும் இன்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கைதிகள் நேற்று (23) முதல் உணவை புறக்கணித்து வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நேற்று இந்த போராட்டத்தை ஆரம்பித்தனர். இதேவேளை, கைதிகளின் உறவினர்கள் யாழ். சிறைச்சாலைக்கு சென்று அவர்களை சந்தித்தனர். பின்னர் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில், வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் இரண்டாவது நாளாகவும் அவர்கள் இணைந்துகொண்டனர். மனிதாபிமான அடிப்படையில் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் எனும் சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.