ஏப்ரல் 21 தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு 

by Staff Writer 22-02-2022 | 3:12 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய்வற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, அதனுடன் தொடர்புடைய சாட்சிப்பதிவுகள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களும் ஆவணத் தொகுப்புகளும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி விசாரணை அறிக்கையின் 88 தொகுப்புகளுடனான முழுமையான அறிக்கை, ஜனாதிபதி சட்டத்துறை பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹனதீரவினால், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்று முற்பகல் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், சட்ட சிக்கல்கள் காரணமாக சாட்சிப் பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் எவையும் வௌிப்படுத்தப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் கண்டறியப்பட்ட விடயங்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதற்காகவும் பாராளுமன்ற உறுப்பினர்களின் மேலதிக பரிசீலனைக்காகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனையின் பிரகாரம் குறித்த ஆவணங்கள் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டன.