21 இந்திய மீனவர்கள் விடுதலை

21 இந்திய மீனவர்கள் விடுதலை

by Staff Writer 21-02-2022 | 4:37 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில், மீனவர்கள் தொடர்பான வழக்கு இன்று (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 03 வருட சிறைத்தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் குறிப்பிட்டார். மீனவர்களிடம் கைப்பற்றப்பட்ட 02 படகுகளையும் அரசுடமையாக்கி நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, மீனவர்களிடம் கைப்பற்றப்பட்ட கையடக்கத்தொலைபேசி உள்ளிட்ட பிரத்தியேக உடமைகளை மீள வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். விடுதலை செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களையும் மிரிஹான இடைத்தங்கல் முகாமிற்கு அனுப்பி, குடியகழ்வு குடிவரவு திணைக்களத்தினூடாக இந்தியாவிற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு பருத்தித்துறை நீதவான் இன்று (21) உத்தரவிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் ஏப்ரல் 04 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு சமர்பிக்குமாறு, யாழ். சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த போது, கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி 21 இந்திய மீனவர்களும் வடக்கு மீனவர்களால் சுற்றிவளைக்கப்பட்டனர். இதன்போது கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு, மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஏனைய செய்திகள்