மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

by Staff Writer 20-02-2022 | 4:44 PM
Colombo (News 1st) மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் ஆலோசனைக் கோவையை வழங்குவதற்கு அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த ஆலோசனைக் கோவை வௌியிடப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார். அதன்கீழ் அரச நிறுவனங்களில் குளிரூட்டிகள் மற்றும் தேவையற்ற மின் விளக்குகளின் பயன்பாட்டை இயன்றளவு குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக அரச வாகனங்களின் எரிபொருளை பயன்படுத்த வேண்டாமெனவும் அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வௌி மாகாணங்களில் இருந்து கலந்துரையாடல்கள் மற்றும் கூட்டங்களுக்காக அரச அதிகாரிகளை கொழும்பிற்கு அழைத்துவரும் செயற்பாடுகளும் தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.