பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமென்ற நம்பிக்கை வலுவிழக்கிறது: கொழும்பு பேராயர் கவலை

by Staff Writer 19-02-2022 | 8:03 PM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமென்ற நம்பிக்கை நாளுக்கு நாள் வலுவிழந்து செல்வதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களும் செயற்படுத்த வேண்டிய பொறிமுறைகளும் பிரச்சினைக்குரியதாக மாறியுள்ளதாகவும் பேராயர் கூறினார். 'தித்த' எனும் நூல் வௌியீட்டு நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்ந்த மாநாட்டு மண்டபத்தில் இன்று (19) நடைபெற்றது. இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் வின்ஸ்டன் பெர்னாண்டோ ஆண்டகை இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய கொழும்பு பேராயர், ஆணைக்குழுவில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வழங்கப்பட்ட சாட்சியங்களை அரசாங்கமும் சட்டமா அதிபரும் மறைத்துள்ளதாகக் கூறினார். அவற்றைக் கேட்டு கடிதங்களை அனுப்பிய போதும், தமது கோரிக்கை கவனத்திற்கொள்ளப்படவில்லை என பேராயர் சுட்டிக்காட்டினார். சில நபர்கள் தாக்குதல் குறித்து அறிந்திருந்தும் அது தொடர்பில் எதனையும் செய்யவில்லை என்பதனால், அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழுவின் அறிக்கையில் கோரியுள்ள போதிலும் சட்டமா அதிபர் மற்றும் அவரின் திணைக்களத்தின் தவறான செயற்பாடுகள் காரணமாக நீதி வழங்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டார். அரசாங்கம் தமக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை எனவும் அவர் கவலை வௌியிட்டார்.