நெடுந்தீவில் கைதான 6 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

by Staff Writer 19-02-2022 | 3:20 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஆறு பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை நீதவான் ஜெ. கஜநிதிபாலன் முன்னிலையில் இந்திய மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியல் ​வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மீனவர்களின் படகை மயிலிட்டு துறைமுகத்தில் தடுத்து வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் இன்று அதிகாலை இந்திய மீனவர்கள் ஆறு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்பில் 56 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் ஒன்பது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.