ஒக்சிஜன் வழங்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஒக்சிஜன் வழங்கப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 10% அதிகரிப்பு

by Staff Writer 19-02-2022 | 5:02 PM
Colombo (News 1st) ஒக்சிஜன் வழங்கப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்தது. அதி தீவிர சிகிச்சை பிரிவிலுள்ள 77 கட்டில்களில் 66 கட்டில்களிலும் கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக COVID பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி குறிப்பிட்டார். 5700 கொரோனா நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், 2650 பேர் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி கூறினார். இதேவேளை, கொரோனா மரணங்களின் எண்ணிக்கை இந்த வாரத்தில் 10 முதல் 12 வீதமாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நேற்று 23 COVID மரணங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்கிணங்க நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 15,949 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நேற்று 1,282 பேருக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 6,34,333 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டின் 4 மாவட்டங்களில் 50 வீதத்திற்கும் மேற்பட்டோருக்கு Booster தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் டொக்டர் ரஞ்சித் படுவன்துடாவ தெரிவித்தார். மாத்தளை மாவட்டத்தில் 63 வீதமானோருக்கு Booster தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதுடன், கண்டி, அநுராதபுரம் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பெருமளவான மக்கள் Booster தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.