ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Feb, 2022 | 4:30 pm

Colombo (News 1st) மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஏனைய குழுக்களின் தீர்மானங்களின் மதிப்பாய்வு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர் A.H.M.D. நவாஸினால் இந்த அறிக்கை நேற்று (18) மாலை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் அல்லது ஏனைய குழுக்கள் கண்டறிந்த தகவல்கள் தொடர்பான விசாரணைகள், ஆராய்ச்சிகள் அற்றும் அறிக்கையிடல்கள் அல்லது உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஜனாதிபதியினால் கடந்த ஆண்டு ஜனவரி 21 ஆம் திகதி குழுவொன்று நியமிக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற நீதியரசர் A.H.M.D. நவாஸின் தலைமையிலான குறித்த ஆணைக்குழுவின் முதலாவது அறிக்கை கடந்த ஆண்டு ஜூலை 21 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

அசாதாரண சூழ்நிலையை எதிர்நோக்கிய மற்றும் அது தொடர்பான அனுபவங்களைக் கொண்ட யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வசிக்கும் 75 பேர் வழங்கிய சாட்சிகளின் அடிப்படையிலான பரிந்துரைகள் அடங்கிய 107 பக்கங்களுடன் இரண்டாவது அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழு கண்டறிந்த விடயங்களை உடன் விசாரணை செய்து , அது தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யவோ அல்லது நட்டஈடு வழங்கவோ பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியில் தலைநிமிர அரசாங்கத்தின் உதவி அவசியமென ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த நபர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் ஆணைக்குழு தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது.

பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதியில்லை எனவும் யுத்தத்தின் போது உறவினரொருவர் உயிரிழந்திருப்பாராயின், தனிப்பட்ட ரீதியில் அவரை நினைவுகூர அனுமதி வழங்கவும் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

அத்துடன் ஜூன் மாதத்திற்குள் இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க முடியுமெனவும் ஆணைக்குழுவின் தலைவரும், உயர் நீதிமன்ற நீதியரசருமான A.H.M.D. நவாஸ் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்