விடுவிக்கப்பட்ட 47 மீனவர்கள் நாடு திரும்பினர்

விடுவிக்கப்பட்ட 47 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்

by Staff Writer 18-02-2022 | 7:35 PM
Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்ட 47 தமிழக மீனவர்கள் இன்று தாயகம் திரும்பினர். கடந்த வருடம் டிசம்பர் மாதம் SEA OF SRILANKA எனப்படும் இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பின் அருகே அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். குறித்த 47 தமிழக மீனவர்களும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 4.30 அளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர். தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்ட மீனவர்கள் இராமேஸ்வரம், புதுக்கோட்டை உள்ளிட்ட அவர்களது சொந்த ஊர்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். சிறை பிடிக்கப்பட்ட 56 இந்திய மீனவர்களில் கடந்த வாரம் 9 மீனவர்கள் தமிழகத்திற்கு திரும்பியதுடன், இன்று 47 மீனவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.