ஹொரணையில் மகனை கடத்திய தந்தை பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு 

by Staff Writer 17-02-2022 | 5:55 PM
Colombo (News 1st) ஹொரணை - கந்தன பகுதியில் பாட்டியின் பாதுகாப்பில் இருந்த 8 வயதான தனது மகனை கடத்திச்சென்ற நபர் இன்று பகல் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார். குறித்த சந்தேகநபர் அங்குருவாத்தோட்டை, வல்பிட்டி பகுதியிலுள்ள வீட்டில் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். இந்த சுற்றிவளைப்பின் போது வீட்டில் பதுங்கியிருந்த சந்தேகநபர் பொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதன்போது, பொலிஸார் மேற்கொண்ட பதில் தாக்குதலில், சந்தேகநபர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். சந்தேகநபரிடமிருந்து T56 ரக துப்பாக்கியும் ஒரு தொகை ரவைகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் கடத்தப்பட்ட சிறுவன் அங்கிருக்கவில்லை எனவும், சிறுவனை தேடும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார். இதேவேளை, குறித்த சந்தேகநபர் தனது மனைவியின் கையை துண்டாடியதுடன், அந்த பெண் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.