தாதியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி ஆலோசனை

by Staff Writer 17-02-2022 | 7:51 PM
Colombo (News 1st) அரச சேவைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தாதியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு இன்று ஆலோசனை வழங்கியுள்ளார். தாதியர் சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்தபோதே ஜனாதிபதி இன்று இதனைக் கூறியுள்ளார். முருதெட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்ட அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஜனாதிபதியை சந்தித்தனர். தாதியர் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தல், பதவி உயர்வு வழங்கும் பொறிமுறை, கடமை நேரம், வைத்தியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவிற்கு ஏற்ப 10,000 ரூபா கொடுப்பனவை வழங்கல், சீருடை கொடுப்பனவு உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் பல்வேறு கோரிக்கைள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. ஒரு தரப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்றும்போது மற்றுமொரு தரப்பினர் மீண்டும் கோரிக்கைகளை முன்வைப்பதாக இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது காணப்படும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.