22 முதல் 25 ஆம் திகதி வரை பாராளுமன்ற சபை அமர்வு

பெப்ரவரி 22 முதல் 25 ஆம் திகதி வரை பாராளுமன்ற சபை அமர்வு

by Staff Writer 17-02-2022 | 3:07 PM
Colombo (News 1st) எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை பாராளுமன்ற சபை அமர்வை நடத்த, பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது. தெரிவுக்குழு இன்று கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக சபை முதல்வர், அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார். உற்பத்தி மூலப்பொருட்களை இறக்குமதி செய்வோருக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான சட்டத்தின் கீழுள்ள கட்டளைகளையும் இறப்பர் மீள்செய்கைக்கான நிவாரண சட்டத்தின் கீழுள்ள கட்டளைகளையும் எதிர்வரும் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்படும் ஒத்திவைப்புவேளை பிரேரணை தொடர்பில் எதிர்வரும் 23 ஆம் திகதி விவாதிக்கப்படவுள்ளது. வனவிலங்குகள் மற்றும் தாவரங்களை பாதுகாப்பதற்குரிய கட்டளைகளை திருத்துவதற்கும் மரம் வெட்டுதல் சட்டத்திலுள்ள தெங்கு தொடர்பான வர்த்தமானியினூடாக குறிப்பிடப்பட்டுள்ள கட்டளைகளையும் எதிர்வரும் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி சட்டத்திற்குட்பட்ட சில நிபந்தனைகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி செயற்றிட்ட சட்டத்தின் கீழுள்ள சில கட்டளைகளையும் பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இரங்கலை தெரிவிப்பதற்கான பிரேரணை ஒன்று எதிர்வரும் 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சபை முதல்வரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.