Quad நாடுகளின் வௌிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

Quad நாடுகளின் வௌிவிவகார அமைச்சர்கள் அவுஸ்திரேலியாவில் சந்திப்பு

by Bella Dalima 11-02-2022 | 8:43 PM
Colombo (News 1st) Quad எனப்படும் இந்திய பசுபிக் வலய நான்கு உறுப்பு நாடுகளின் மாநாடு இன்று (11) அவுஸ்திரேலியாவின் மெல்பர்னில் நடைபெற்றது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன், இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், அவுஸ்திரேலிய வௌிவிவகார அமைச்சர் Marise Payne, ஜப்பானின் வௌிவிவகார அமைச்சர் Yoshimasa Hayashi ஆகிய நால்வரும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசனும் இந்த மாநாட்டில் பங்கேற்றதுடன், வலய பாதுகாப்பு குறித்து மேலும் நெருங்கி செயற்படுவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. சர்வதேச சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு ஆகியன இந்திய - பசுபிக் வலய அமைப்பின் செழுமைக்கு முக்கிய காரணியாகும் என இந்த மாநாட்டினை அடுத்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தெற்கு மற்றும் கிழக்கு, சீன கடற்பிராந்தியம் உள்ளிட்ட அனைத்து சமுத்திர வலயத்தில் ஏற்படும் சவால்களை சர்வதேச மரபுகள் மற்றும் சட்டங்களின் பிரகாரம் எதிர்நோக்க வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்திய - பசுபிக் வலயத்தில் பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பில், தகவல்களை பரிமாற்றிக்கொள்வது குறித்தும் இந்த மாநாட்டில் கலந்துரையாடப்பட்டுள்ளது. Quad உறுப்பு நாடுகளை அண்மித்த நாடுகளை மேலும் பலப்படுத்துவதற்கு தாம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, சுதந்திரமான மற்றும் திறந்த வலய பாதுகாப்பை பேணுவது குறித்தும் Quad உறுப்பு நாடுகளின் இன்றைய மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பனிப்போர் மனநிலையில் அமெரிக்காவும் இந்தியாவும் உள்ளதாகவும் மோதல்களை உருவாக்குவதற்கு முயற்சிப்பதாகவும் நான்கு நாடுகளின் மாநாடு தொடர்பில் சீனா குற்றஞ்சுமத்தியுள்ளது. இதற்காக விசேட குழுவொன்றை உருவாக்குவது தொடர்பிலும் சீனா எதிர்ப்பு தெரிப்பதாக, அந்நாட்டின் வௌிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் ஷாஓ லீஜியேன் தெரிவித்துள்ளார். இந்திய - பசுபிக் வலய நாடுகளிடையே அமைதியின்மையை தோற்றுவிக்காது சமாதானம், ஸ்திரத்தன்மை மற்றும் சுபீட்சத்தை அடைய அமெரிக்காவும் பிற நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.