வவுனியா பல்கலைக்கழகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு 

by Bella Dalima 11-02-2022 | 3:35 PM
Colombo (News 1st) வவுனியா பல்கலைக்கழகம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இன்று (11) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி தலைமையில் இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு இடம்பெற்றது. அமைச்சர்களான தினேஸ் குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்விதுறைசார் அதிகாரிகள், மன்னார் மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். இலங்கையில் 17 ஆவது பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக்கழகம் பதிவாகியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்தார். முகாமைத்துவம், பொருளியல் உள்ளிட்ட 03 பீடங்களை வவுனியா பல்கலைக்கழகம் கொண்டுள்ளது. க.பொ.த உயர் தரத்தில் சித்தியடையும் அதிகளவான மாணவர்களுக்கு பல்கலைக்கழக வாய்ப்பை வழங்குவதே, வவுனியா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டமைக்கான அரசாங்கத்தின் நோக்கமென பேராசிரியர் சந்தன உடவத்த குறிப்பிட்டார்.