by Bella Dalima 11-02-2022 | 4:59 PM
Colombo (News 1st) புத்தளம் - கற்பிட்டி கடற்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களின் 04 படகுகள் இன்று (11) ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.
இன்று முற்பகல் கற்பிட்டி - ஆனவாசல் கடற்படை முகாமில் இந்த ஏல விற்பனை இடம்பெற்றது.
இதன்போது யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் வாரியபொல ஆகிய பகுதிகளில் இருந்து பத்திற்கும் மேற்பட்ட கொள்வனவாளர்கள் வருகை தந்திருந்தனர்.
தலா 50,000 ரூபா வீதம் நான்கு படகுகள் 2 இலட்சம் ரூபாவிற்கு இன்று விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, தலைமன்னாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 படகுகள் நேற்று ஏலத்தில் விடப்படவுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், நேற்று ஏல விற்பனை நடைபெறவில்லை.
தமிழக அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் படகுகள் ஏலத்தில் விடப்படுவதை தடுத்து நிறுத்துமாறு இந்திய மத்திய அரசாங்கத்திடமும் இலங்கை அரசாங்கத்திடமும் வலியுறுத்தி வந்த நிலையில், இன்றைய தினத்துடன் 152 படகுகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்த படகுகள் 59,46,300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.