ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு விடுத்துள்ள அறிவிப்பு

பயங்கரவாத தடைச்சட்ட பயன்பாட்டை மட்டுப்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு அறிவிப்பு

by Staff Writer 09-02-2022 | 8:45 PM
Colombo (News 1st) பயங்கரவாத தடைச்சட்டத்தின் பயன்பாட்டினை மேலும் மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு அறிவித்துள்ளது. பங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிணை வழங்கி, விடுதலை செய்வதற்கான நடைமுறை சாத்தியமான நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கையின் கூட்டு ஆணைக்குழுவின் 24 ஆவது கூட்டம் பெல்ஜியத்தின் பிரசல்ஸில் நடைபெற்றது. நேற்று நிறைவுபெற்ற கூட்டு ஆணைக்குழு கூட்டத்தின் பின்னர் விடுக்கப்பட்ட இணைந்த அறிக்கையில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள விடயங்களில் அத்தியாவசியமான திருத்தங்கள் உள்ளடக்கப்படவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. சர்வதேச தரங்களுக்கு அமைய இந்த திருத்தங்களை மேற்கொள்வதாக வௌிவிவகார அமைச்சின் செயலாளர், பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே உள்ளிட்ட இலங்கையின் பிரதிநிதிகள் குழு இதன்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிவித்துள்ளது. இதனிடையே, GSP+ வரிச் சலுகையை தொடர்ந்தும் பேணுவதற்கு ஏதுவாக 27 சர்வதேச ஒப்பந்தங்களை திறமையாக நடைமுறைப்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக இலங்கை பிரதிநிதிகள் குழு இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இம்முறை கூட்டத்தொடரின்போது அறிக்கையை வௌியிடவுள்ளார்.