மலை இடுக்கில் சிக்கியிருந்த இளைஞர் மீட்பு

கேரளாவில் 40 மணித்தியாலங்கள் மலை இடுக்கில் சிக்கியிருந்த இளைஞர் மீட்பு

by Bella Dalima 09-02-2022 | 3:57 PM
Colombo (News 1st) கேரளாவில் மலை இடுக்கில் சிக்கிக்கொண்ட இளைஞர் 40 மணித்தியாலங்களின் பின்னர் இந்திய இராணுவத்தினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா என்கிற மலைத்தொடரில் கடந்த திங்கட்கிழமையன்று மலையேற சென்ற 23 வயதான பாபு என்ற இளைஞர் மலை இடுக்கு ஒன்றில் சிக்கிக்கொண்டார். இதனையடுத்து, இராணுவத்தினர் அவரை மீட்கும் பணியில் நேற்று (08) நள்ளிரவு முதல் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இரண்டு குழுக்களாக அப்பகுதிக்கு விரைந்த இராணுவத்தினர், பாபுவை மீட்டுள்ளனர். அதன் பிறகு, இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், பாபு இந்திய இராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவர்களுக்கு முத்தமிட்டு மகிழ்ந்தார். கடந்த திங்கட்கிழமை எலிச்சிரம் அருகே உள்ள குரும்பாச்சி மலையில் தனது மூன்று நண்பர்களுடன் மலையேற்றத்தில் ஈடுபட்ட போது நடுவழியில் கால் இடறியதில் பாபு தவறி வீழ்ந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், கொடிகள் மற்றும் குச்சிகளைப் பயன்படுத்தி பாபுவை மீட்க முயன்றுள்ளனர். மலையின் மேல் பகுதிக்கு சென்று கயிறு மூலம் அவரை மீட்கவும் முயன்றிருக்கின்றனர். ஆனால், அவர் வீழ்ந்த பகுதி சரியாக தென்படாததால் கீழே இறங்கி வந்து பார்த்தனர். அப்போதுதான், பார்வைக்கு புலப்படாத இடுக்கில் அவர் சிக்கிக் கொண்டது அவர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து, மலையிலிருந்து கீழிறங்கிய பாபுவின் நண்பர்கள், அப்பகுதி மக்களுக்கும், பொலிஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். நள்ளிரவில் கேரள தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மற்றும் மலம்புழா பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். எனினும், போதிய வெளிச்சம் இல்லாததால், அவர்களால் மீட்புப் பணிகளைத் தொடங்க முடியவில்லை. இருப்பினும், பாபுவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அங்கேயே தங்கியிருந்த அக்குழுவினர், இரவு நேரத்தில் வன விலங்குகள் வராமல் இருக்க, தீப்பந்தங்களையும் ஏற்றியுள்ளனர். 40 மணி நேரத்திற்கும் மேலாக உணவு, தண்ணீர் இல்லாமல் இருந்த பாபுவை தொடர்புகொண்டு பேசிய இராணுவம், அவர் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துகொண்டனர். பின்னர், அவரை பத்திரமாக மீட்க, நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் இருந்தும் பெங்களூரில் இருந்தும் மீட்புக்குழுக்கள் விரைந்தன. இந்த மீட்பு பணிக்காக, அப்பகுதியை கண்காணிக்க டிரோன்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.    

Source: BBC