கிளிநொச்சியில் இந்திய படகுகள் ஏலத்தில் விற்பனை

by Staff Writer 09-02-2022 | 2:11 PM
Colombo (News 1st) இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த போது கைப்பற்றப்பட்ட படகுகள் 03 நாட்களாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி - கிராஞ்சி கடற்படைத்தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகள் இன்று (09) ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த போது கைப்பற்றப்பட்டு கிளிநொச்சி -  கிராஞ்சி கடற்படைத்தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இந்திய மீனவப்படகுகள் இன்று (09) ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளின் தலைமையில் இன்று (09) முற்பகல் 11 மணிக்கு ஏல விற்பனை ஆரம்பிக்கப்பட்டது. 8 படகுகளில் படகொன்று 20,200 ரூபாவிற்கும் ஏனையவை 10,000 ரூபா முதல் 11,000 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. புத்தளம், மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் கொள்வனவாளர்கள் இன்று (09) வருகை தந்திருந்ததாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (09) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளைய தினம் (10) இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தப் போராட்டத்தினால், இன்று (09) இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் 800 இற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்றொழிலுக்கு செல்லாமல் கடலில் நங்கூரமிட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.