தமிழக முதல்வர் பிரதமர் மோடிக்கு கடிதம்

தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்படுவதை தடுத்து நிறுத்த கோரி தமிழக முதல்வர் பிரதமர் மோடிக்கு கடிதம்

by Staff Writer 08-02-2022 | 9:02 AM
Colombo (News 1st) இந்திய மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விடும் இலங்கை அரசின் முயற்சிகளை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை விடுவிக்கவும் பிரதமர்  அவசரமாக தலையிட வேண்டுமென தமிழக முதல்வர் தமது கடிதத்தில் கோரியுள்ளார். தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 105 மீன்பிடிப் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் நடவடிக்கை சட்டத்திற்கு புறம்பானது என குறிப்பிட்டுள்ள தமிழக முதல்வர், கவலைக்குரிய இந்த நடவடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். ஏலத்தைத் தடுத்துநிறுத்திடவும் 2018 ஆம் ஆண்டிற்கு முன்னர் சிறைபிடிக்கப்பட்ட 125 பழுதுபார்க்க இயலாத நிலையில் உள்ள தமிழகப் படகுகள் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்பார்வையிட அதிகாரிகள் மற்றும் மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்களின் உத்தேச பயணத்திற்கு இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் ஒப்புதலையும் தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விடும் நடவடிக்கை நேற்று (07) ஆரம்பமானது.