by Staff Writer 08-02-2022 | 3:28 PM
Colombo (News 1st) இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த போது கைப்பற்றப்பட்டு காங்கேசன்துறை கடற்படைத்தளத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த இந்திய மீனவர்களின் 5 படகுகள் இன்று ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.
கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளால் இன்று நடத்தப்பட்ட ஏல விற்பனையில், 43 கொள்வனவாளர்கள் கலந்துகொண்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.
அதற்கமைய, இந்திய படகொன்று 50,000 ரூபா முதல் 1,50,000 ரூபா வரை ஏலத்தில் விடப்பட்டுள்ளது.
இதேவேளை, கிளிநொச்சி - கரைச்சி கடற்படைத்தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 இந்திய படகுகளை நாளைய தினமும், தலைமன்னார் கடற்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 9 படகுகளை எதிர்வரும் 10 ஆம் திகதியும் ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புத்தளம் - கற்பிட்டி கடற்படைத்தளத்தில் தடுத்து வைக்கப்பட்டு இந்திய மீனவர்களின் 03 படகுகளை எதிர்வரும் 11 ஆம் திகதி ஏல விற்பனை செய்யவுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனிடையே, காரைநகர் கடற்படைத்தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 135 படகுகள் நேற்று ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கடற்பரப்பிற்குள் கைப்பற்றப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளையும் சேதமடைந்த படகுகளின் பாகங்களையும் ஏலத்தில் விற்பனை செய்ய கடற்றொழில் திணைக்களம் தீர்மானித்ததற்கு அமைய ஏல விற்பனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.